விழுப்புரம் ரயில் நிலையத்தில் தரமில்லாத உணவு சமைத்து விற்பனை செய்த உணவகத்துக்கு ரயில்வே துறை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் 4-5 ஆவது நடைமேடையின் மையத்தில் வி.ஆர்.ஆர். என்ற உணவகம் இயங்கி வந்தது. முகமது அக்பர் என்பவர், ஒப்பந்தம் எடுத்து இந்த உணவகத்தை ஐ.ஆர்.சி.டி.சியின் கீழ் நடத்தி வந்தார்.
இங்கு தயார் செய்து விற்கப்படும் உணவு வகைகள் தரமில்லாமல் உள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், திருச்சி மண்டல வணிகப் பிரிவு அதிகாரிகள் இந்தக் கடைக்கு அண்மையில் அதிரடியாக "சீல்' வைத்தனர். தரமில்லாத உணவு தயார் செய்து வழங்கியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
இதுகுறித்து திருச்சி கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மனச ரன்சன் கூறுகையில், தரமில்லாத உணவு விற்பனை தொடர்பாக ஏற்கெனவே அந்த உணவகத்துக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, இதேபோன்ற புகார்கள் எழுந்ததால், அதுகுறித்து ஆய்வு செய்து கடைக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது என்றார்.