விழுப்புரம் புறவழிச்சாலையில் புதன்கிழமை சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி அருகிலிருந்த ஏரியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி புதன்கிழமை பகல் 11.30 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்து.
செஞ்சி புறவழிச்சாலை அருகே வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கில் கடந்த நாயை கண்டு, கார் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஏரியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. சுமார் 6 அடி ஆழம் கொண்ட அந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால், காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி மாரியம்மாள்(55), அருள் நடராஜன்(55), அவரது மனைவி கலைவாணி(50) மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.