விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினி லாரி மோதியதில் கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு மினி லாரி ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த மினி லாரி உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள செம்பியன்மாதேவி பேருந்து நிறுத்தம் அருகே காலை 7 மணியளவில் வந்த போது, சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியதாகத் தெரிகிறது. இதில், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் மீது மினி லாரி மோதியது.
காரில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம், நூரோலையைச் சேர்ந்த கோபால் மகன் ராஜமாணிக்கம் (50) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரிலிருந்த அவரது கர்ப்பிணி மகளான கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தைச் சேர்ந்த விஜயபாரதி மனைவி பரிமளா (26) பலத்த காயமடைந்தார். அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
மினி லாரியில் பயணம் செய்த சேலம் மாவட்டம், சிவபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் மாணிக்கம் (40) பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும், காயமடைந்த செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி சுமதி (27), நூரோலை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் அரிராமச்சந்திரன் (35), நாகேஷ் மகன் அருள்முருகன் (24) ஆகியோர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.