விழுப்புரம் அருகே போலி மருத்துவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில், முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விழுப்புரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மணிமேகலை, மருத்துவர் ராஜ்குமார், மருந்து ஆய்வாளர் சுகுமார், சங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், செவ்வாய்க்கிழமை மாலை அன்னியூருக்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, கடை வீதியில் மருந்துக்கடை வைத்திருந்த நபர், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கண்டமங்கலம் அருகே உள்ள பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த வீரராகவலு (52) என்பதும், பி.யு.சி. மட்டுமே படித்திருந்த அவர், பொதுமக்களுக்கு ஆங்கில வழி மருத்துவம் பார்த்து ஊசி, மருந்துகளை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், அவர், பார்மசிஸ்ட் படிப்பு முடிக்காமல் மருந்தகம் நடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, வீரராகவலுவை பிடித்த மருத்துவக் குழுவினர், அவரை கஞ்சனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருந்தகத்தில் இருந்த மருந்துப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து, இணை இயக்குநர் மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில், கஞ்சனூர் போலீஸார் வீரராகவலு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இவர் மீது, கடந்த ஜூலை மாதத்தில் இதேபோன்ற புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.