திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரி நடத்தியதில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெüதமசிகாமணி உள்பட 8 பேர் மீதான வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி (பொறுப்பு) யு.மோனிகா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோதகுமார், லோகநாதன், கோபிநாத், சதானந்தம் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) யு.மோனிகா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. இதற்காக, அவரது வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.