திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர் உடல் கருகி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருக்கோவிலூரை அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் லிங்கேஷ்வரன்(12). திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை தனது விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார் கொட்டகையில், உடைந்த பிளாஸ்டிக் குழாயை சரி செய்வதற்காக, அதன் இரு முனைகளிலும் தீப்பந்தம் ஏற்றி காண்பித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, தீப்பந்தம் எதிர்பாராமல் கையில் இருந்து தவறி, கீழே இருந்த மண்ணெண்ணெய் கேனில் விழுந்து, லிங்கேஷ்வரனின் உடலில் தீப்பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட லிங்கேஷ்வரன், திருக்கோவிலூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.