கள்ளக்குறிச்சியில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்துக் கடைகளில் வேளாண் துறையினர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கி.வேலாயுதம் தலைமையில் வந்த அலுவலர்கள் உரம் மற்றும் பூச்சி மருந்துக் கடைகளுக்கான உரிமம் உள்ளதா, மருந்து அடைப்பானில் உள்ள விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனரா, காலாவதியான மருந்துகள், கலப்படமான உர மூட்டைகள் விற்பனை செய்கின்றனரா என அனைத்துக் கடைகளிலும் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி - சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது, சில கடைகளில் உரம், பூச்சி மருந்துகள் இருப்பு மற்றும் விலை குறித்து குறிப்பிடப்படாமல் இருந்தது கண்டு எச்சரித்தனர்.
பூச்சி மருந்து விற்பனை செய்யும்போது, விவசாயிகளின் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது கள்ளக்குறிச்சி வேளாண்மை அலுவலர் ஆ.அன்பழகன், விவசாய பிரதிநிதி அம்மாசி உடனிருந்தனர்.