குடிநீர் பிரச்னை: பிடிஓ அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) அலுவலகத்தை காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) அலுவலகத்தை காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 விழுப்புரம் வட்டம், கெடார் அருகேயுள்ள கக்கனூர் புதுப்பேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, சிறுமின்விசைப் பம்பு அமைத்து குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து வந்தனர்.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்த கிராம மக்கள், குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறியதாவது: கக்கனூர் புதுப்பேட்டை பகுதியில் சிறுமின்விசைப் பம்பு அமைத்து, குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது.
 சிறுமின்விசைப் பம்புக்கான ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றிப்போனதால், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தனர். புதிய போர் போட்டு, ஒரு மாத காலமாகியும், அதில், மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதற்கானப் பணிகளை மேற்கொள்ளவில்லை. குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று, ஊராட்சிச் செயலர் உள்ளிட்டோரிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விரைந்து மோட்டார் பொருத்தி குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்றனர். இந்தப் பிரச்னை குறித்து கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் மூன்று நாள்களுக்குள் ஆழ்துளைக் கிணற்றில் மோட்டார் பொருத்தி தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com