விழுப்புரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக டிராக்டர், லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வளவனூர் உதவி காவல் ஆய்வாளர் பலராமன் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, ராம்பாக்கம் ஓடையில் இருந்து சிலர் மணல் திருடி கடத்த முன்றனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பியோடினர். அங்கிருந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வளவனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதேபோல, விழுப்புரம் அருகே உள்ள காணை பகுதியில் உதவி ஆய்வாளர் ஹரிகரசுதன் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, செல்லங்குப்பம் பம்பை ஆற்றிலிருந்து சிலர் மணல் எடுத்து கடத்த முயன்றனராம். அவர்களை போலீஸார் பிடிக்க முயன்றனார். ஆனால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து அங்கிருந்த லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, தப்பியோடிய மணல் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.