விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரக்கு ரயில் விபத்து பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம்} மேப்புலியூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே, சென்னை}திருச்சி ரயில் வழித்தடத்தில் உள்ள கடவுப்பாதையை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் கடக்க முயன்ற டிராக்டர், சரக்கு ரயில் மோதியதில் ஒருவர் இறந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் ரயில்வே துறை, காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்தில் அனைத்துத் துறையினரும் அப்பகுதிக்கு விரைந்தனர். நிகழ்விடத்துக்கு வந்ததும் ஒத்திகை என்பதை அறிந்த அவர்களிடம், மீட்பு நடவடிக்கைகள், காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது, டிராக்டரை அப்புறப்படுத்தி இருப்புப்பாதை போக்குவரத்தைச் சீர்படுத்துவது போன்றவற்றை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்வது குறித்து விளக்கப்பட்டது.
தென்னக ரயில்வே மண்டல மேலாளர் உதயகுமார் ரெட்டி, பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோரின் ஆலோசனையின்பேரில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஒத்திகைக்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் 100 மீட்டர் தொலைவில் சுமார் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஒத்திகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 40 நிமிட தாமதத்துக்குப் பிறகு சரக்கு ரயில் அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது.