மது கடத்தல்: இருவர் கைது
புதுவையிலிருந்து வேனில் மதுப் புட்டிகள், எரி சாராயம் கடத்தியதாக இருவரை விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுவையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில், புதுவை மாநில மதுப் புட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. வேனில், 35 அட்டைப் பெட்டிகளில் 1,680 மதுப் புட்டிகளும், 35 லிட்டர் எரி சாராயமும் இருந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகளை கடத்தி வந்தவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கள்ளக்குறிச்சி அண்ணாசாலை நகரைச் சேர்ந்த வைரமுத்து மகன் கார்த்திகேயன்(36), புதுவை முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த முகமதுஎவசம் மகன் அப்துல்லா (26) என்பதும், இருவரும் புதுவையிலிருந்து, சென்னைக்கு மதுபானங்களைக் கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, கார்த்திகேயன், அப்துல்லா இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் மற்றும் வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.