உளுந்தூர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்தது. அப்போது, மின்னல் பாய்ந்ததில், 3 பெண்கள் காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட கூடுதலாக இருந்த நிலையில், பிற்பகல் திடீரென மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில், மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே உளுந்தூர்பேட்டை அருகே வடக்குறும்பலூரில் மழை பெய்தபோது, அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சத்தியவாணி, பாண்டியன் மனைவி சங்கீதா(36), கொளஞ்சி மனைவி காஞ்சனா(35) ஆகியோர் அருகிலிருந்த தென்னை மரம் அருகில் ஒதுங்கினர். அப்போது, தென்னை மரத்தில் மின்னல் பாய்ந்தது. இதில் அங்கு நின்றிருந்த சத்தியவாணி உள்ளிட்ட பேரும் காயமடைந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.