ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் தமுமுகவினர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முஸ்தக்தீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாரூக், மனித நேயமக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜான்பாஷா, மாவட்டப் பொருளாளர் அப்பாஸ், மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் காஜாமைதீன் வரவேற்றார்.
தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் சையது உஸ்மான், முகமது இஸ்மாயில், மனித நேய மக்கள் கட்சி துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி, பிலால் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து கைகளில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.