புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த 4 இளைஞர்களை விழுப்புரம் மாவட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணி அளவில் வேகமாக வந்த 2 பைக்குகளை மது விலக்குத் தடுப்புப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீஸார் சந்தேகத்தின் பேரில் மடக்கினர்.
பைக்குகளில் இருவர் வீதம் வந்த 4 இளைஞர்கள் வைத்திருந்த மூட்டைகளில் 235 மதுப் புட்டிகள் இருந்ததும், அவை புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.
இந்த மதுப்புட்டிகளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும். இதுதொடர்பாக சென்னை, பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த எத்திராஜ் மகன் சீனிவாசன்(28), சமுத்திரம் மகன் சதீஷ்(29), விநாயகமூர்த்தி மகன் விஜயக்குமார்(23), தேவன் மகன் ஜெயப்பிரகாஷ்(22) ஆகியோரையும் மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களையும் திண்டிவனம் மது விலக்கு பிரிவில் போலீஸார் ஒப்படைத்தனர். மதுவிலக்குப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ், சீனிவாசன் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.