உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு, வருகிற செவ்வாய்க்கிழமை(ஏப்.17) சாகை வார்த்தலுடன் விழா தொடங்கி மே 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் கண் திறத்தல் வருகிற மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று திருநங்கைகள் பூசாரி கையால் தாலிக்கட்டி கொண்டு ஆடிப்பாடி மகிழ்வர். தொடர்ந்து, மே 2-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறும். அன்று, திருநங்கைகள் தங்கள் தாலியை அகற்றிக் கொண்டு, வெள்ளை ஆடை தரித்து வீட்டுக்குத் திரும்புவர். கூவாகம் திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பர். மேலும், பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபடுவர்.