செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் நடைபெற்றது.
சித்திரை மாத அமாவாசையில் இருந்து மூன்று நாள்கள் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காளம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவ அம்மன் அன்ன வாகனத்தில், காயத்ரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், அக்னி குளத்துக்கு பூசாரிகள் புறப்பட்டு சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு திருவீதியுலா வந்தது. தொடர்ந்து, மயானத்தில் கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழுத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் செய்திருந்தனர்.