கள்ளக்குறிச்சியை அடுத்த வி.மாமாந்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாமி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வி.மாமாந்தூரில் முருகன் கோயில் விழாவில் அன்னப்படையலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. நடுத்தெரு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேருக்கும், அதே ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு திட்டி தாக்கி கொண்டனர். சிறிது நேரம் கழித்து ஊரைச் சேர்ந்தவர்களும், காலனி பகுதியைச் சேர்ந்தவர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் ஊர் பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராமசாமி (45) காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி, சின்னசேலம் காவல் ஆய்வாளர் பி.கணபதி, கீழ்க்குப்பம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் இரு தரப்பைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப் பதிந்து தலா 10 பேரை திங்கள்கிழமை கைது செய்தனர்.