உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் அதிக கட்டணம் வசூலிக்கும் அரசுப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, சேந்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், செங்குறிச்சி, பாதூர், ஆனத்தூர், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. இந்தப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களிடம் ரூ.175-ம், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களிடம் ரூ.375-ம், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.200-ம், மேல்நிலைப் பள்ளியில் கணினி வகுப்பு மாணவர்களிடம் ரூ.450-ம், மற்ற மாணவர்களிடம் ரூ.200-ம் வசூல் செய்து வருகின்றனர்.
மேலும், வினாத்தாள் கட்டணமாக 6-ஆம் வகுப்பு முதல்
8-ஆம் வகுப்பு வரை ரூ.40-ம்,
9, 11-ஆம் வகுப்புகளுக்கு ரூ.60-ம், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு ரூ.70-ம் மட்டுமே அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், வினாத்தாள் கட்டணம், ராணுவ வீரர் நன்கொடை என்ற பெயரிலும், மாணவர்கள் சேர்க்கையின்போதும் உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூக ஆர்வலர் சே.த.சாமிதுரை தலைமையிலான மாணவர்கள், உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலரின் உதவியாளரிடம் மனு அளித்தனர்.