விழுப்புரத்தில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காண உதவிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் சனிக்கிழமை பாராட்டினர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அண்மையில் வெளியே வந்த மூன்று பெண்கள், அங்குள்ள ஷேர் ஆட்டோவில் ஏரி வந்துள்ளனர். அப்போது, அவர்கள் ஷேர் ஆட்டோ பயணிகளிடம் பணத்தை திருடிக்கொண்டு, வேறு ஷேர் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, உஷாரான ஷேர் ஆட்டோ ஓட்டுநர் இளையராஜா உள்ளிட்டோர், இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருதுவிடம் செல்லிடப்பேசி மூலம் தகவல் அளித்தார்.
விரைந்து வந்த உதவி ஆய்வாளர் மருது மற்றும் போலீஸார், ஷேர் ஆட்டோவில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த மூன்று பெண்களைப் பிடித்து விசாரித்தனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், விழுப்புரத்தில் தங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில், குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பித்து உதவிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீஸார் பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், விழுப்புரத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களான இளையராஜா, சரவணன், செந்தில் ஆகியோருக்கு சனிக்கிழமை சன்மானம் வழங்கி பாராட்டினார்.