பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் மடிக்கணினியுடன் கூடிய இணைய தள வசதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மாவட்ட மாறுதல் கோப்புகள் அனைத்தும் ஒரே அரசாணையில் செயல்படுத்தப்பட வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.புஷ்பகாந்தன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பொன்.கண்ணதாசன், துணைத் தலைவர் ச.பெரியதமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் இ.எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். துணைப்பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் ராஜி, பரமாநந்தம் வாழ்த்திப் பேசினர். வட்டத் தலைவர் லட்சுமணன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் கமலநாதன், அமைப்புச் செயலாளர் முத்திரைவேல், செந்தமிழ்ச்செல்வன், முத்துகிருஷ்ணன், பாரதிதாசன், ராஜி, மீனாட்சி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், டிச.10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.