திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணையை வருகிற பிப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரி நடத்தி, அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன் கெüதமசிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக போலீஸார் மூலம் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று அரசுத் தரப்பிலும், பொன்முடி, கெüதமசிகாமணி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பொன்முடி தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, க.பொன்முடி, ஜெயச்சந்திரன், கோதகுமார், லோகநாதன், கோபிநாத், சதானந்தம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கெüதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி யு.மோனிகா, விசாரணையை வருகிற பிப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக, இந்த வழக்கில் ஆஜரான ஜெயச்சந்திரன், திடீரென நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் கடந்த திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையும் இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு, திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி யு.மோனிகா, விசாரணையை பிப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.