அதிகாரிகளை பணிநீக்கம் செய்து விசாரிக்க வலியுறுத்தல்

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்ற போலியான பணி நியமனத்தில் தொடர்புடைய அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொமுச பேரவை பொதுச் செயலர் வலியுறுத்தினார். 

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்ற போலியான பணி நியமனத்தில் தொடர்புடைய அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொமுச பேரவை பொதுச் செயலர் வலியுறுத்தினார்.
 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்குவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் வாயிற் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் எதிரே நடைபெற்ற கூட்டத்துக்கு மண்டல தொமுச பொதுச் செயலர் வி.சேகர் தலைமை வகித்தார். சிஐடியு பொதுச் செயலர் ஆர்.மூர்த்தி வரவேற்றார்.
 நிபமுச பொதுச் செயலர்
 எம்.மணி, தேமுதொச பொதுச் செயலர் ரகமத்துல்லா, பாதொச எஸ்.ஞானமூர்த்தி, ஐஎன்டியுசி ஜி.முருகானந்தம், பணியாளர்
 சம்மேளனம் ஆர்.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், சிஐடியு சம்மேளன துணைப் பொதுச் செயலர் பி.பாலகிருஷ்ணன், பாதொச பேரவைத் தலைவர் க.நந்தகோபால், எம்எல்எப் பேரவை செயலாளர் எஸ்.மனோகரன், பணியாளர் சம்மேளனத் தலைவர் எஸ்.ஷாஜகான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகத்தையும், ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத்தினர்கள், முறைகேடுகளுக்கு காரணமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளையும் கண்டித்து கூட்டத்தில் பேசினர்.
 இதில், பங்கேற்ற தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை, கடந்த 2016 செப்டம்பர் முதல் தமிழக அரசு வழங்காமல் கடந்த 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது.
 தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்காமல் அதிமுக அரசு செய்த துரோகச் செயல் காரணமாக கடந்த ஜன.4-ஆம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
 இப்பிரச்னையில் உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஊதிய உயர்வு தொடர்பாக, தனி நடுவர் அமைத்து தீர்வு காண அறிவுறுத்தியதால், போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதென்று, நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். ஆனால், போக்குவரத்துக் கழக நிர்வாகம் பலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
 விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், தொடர்புடைய அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும்.
 தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வு ஏற்புடையதல்ல.
 அதனை திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி வருகிறோம் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com