விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வழுதரெட்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாள்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. சில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீஸார் மற்றும் நகர சுகாதாரத் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.