போலி மதுபானம் தயாரித்து விற்பனை: இருவர் கைது; 525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சியை அடுத்த தொட்டியம், இந்திரா நகரில் போலி மதுபானம் தயாரித்ததாக இருவரை கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தொட்டியம், இந்திரா நகரில் போலி மதுபானம் தயாரித்ததாக இருவரை கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 525 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
 கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் துரைராஜ் (40). இவரது நிலம் கள்ளக்குறிச்சியை அடுத்த தொட்டியம், அண்ணா நகரில் உள்ளது. இந்த நிலையில், இந்த நிலத்தில் உள்ள கொட்டகையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 அதன்பேரில், கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜாராம், காவல் உதவி ஆய்வாளர் அ.அகிலன் மற்றும் போலீஸார் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சின்னசேலம் - தொட்டியம் சாலையில் மொபெட்டில் கேனை வைத்துக்கொண்டு வந்த இருவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் வைத்திருந்த கேனில் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.
 மேலும், பிடிபட்ட இருவரும் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ், விழுப்புரத்தைச் சேர்ந்த வேலுசாமி மகன் இளவரசன் (40) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் புதுச்சேரியில் இருந்து எரிசாராயம் வாங்கி வந்து காலி மதுபானப் புட்டிகளில் நிரப்பி போலி மதுபானங்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது.
 இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் மறைத்து வைத்திருந்த 525 லிட்டர் எரிசாராயம், 500 காலி மதுபானப் புட்டிகள், சீல் வைக்கும் இயந்திரம், 1,100 போலி லேபில்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com