மதுபானக் கடையின் பூட்டை உடைத்து 157 மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகத்தை அடுத்த கலையநல்லூரில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையின் விற்பனையாளராகப் பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ஏழுமலை (44) பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல திங்கள்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக செல்லிடப்பேசி மூலம் அவருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அவர் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பல்வேறு வகையான 157 மதுப் புட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.