விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் இளைஞர்கள் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழகுவேல் மகன் மணிவேல் (23), செல்வராஜ் மகன் சின்னதுரை (25). இருவரும் உறவினர்கள்.
மணிவேலுக்கு வருகிற திங்கள்கிழமை (பிப்.19) திருமணம் நடைபெற இருந்தது.
அதற்காக மணிவேல், சின்னதுரை ஆகிய இருவரும் சிறுபாக்கத்தில் உள்ள நண்பர்களுக்கு பத்திரிகை வைத்து விட்டு பைக்கில் புதன்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர்.
நைனார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது, வேப்பூர் நோக்கிச் சென்ற தனியார் மகளிர் கல்லூரிப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் சின்னதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மணிவேல் அவசர ஊர்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
விபத்து குறித்து கீழ்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.