விழுப்புரத்தில் சுகாதார மேற்பார்வையாளர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் உள்ள காமதேனு நகரைச் சேர்ந்தவர் சங்கர்(44). சிறுவந்தாட்டில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.
இவரது மனைவி, ஜமுனாராணி, ஆசிரியை. இவர்கள் இருவரும், வழக்கம்போல புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர்.
மாலையில் ஜமுனாராணி வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்களை உடைத்து சுமார் 13 பவுன் நகைகள், ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.