திருக்கோவிலூர் அருகே தனியார் தொழில்பயிற்சி பள்ளித் தாளாளர் மீது போலீஸில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரத்தில் இயங்கும் தனியார் தொழில்பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்கள் 42 பேர், திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கண்டாச்சிபுரம் தொழில்பயிற்சிப் பள்ளியில், கடந்த 2012-14-ஆம் கல்வியாண்டு எலக்ட்ரீஷியன் பாடப் பிரிவில் சேர்ந்து படிப்பதற்காக தலா ரூ.40 ஆயிரம் நன்கொடை மற்றும் கல்வி கட்டணமாக செலுத்தினோம்.
இந்த பாடப் பிரிவில் 21 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என அரசு அனுமதி வழங்கியும், பள்ளித் தாளாளர் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, பல்வேறு தனியார் தொழில்பயிற்சி பள்ளிகளில் தேர்வு எழுதவும், கல்விச் சான்றுகள் பெற்றுத் தரும் இடைத்தரகராகவும் செயல்பட்டது பிறகுதான் தெரியவந்தது.
2012-14-ஆம் கல்வியாண்டில் தேர்வெழுதிய எங்களுக்கு தொழில் கல்வி சான்றிதழ், சேர்க்கையின்போது பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே, உரிய விசாரணை நடத்தி, பள்ளித் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.