விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருங்கைகளின் மகளிர் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருநங்கையர்களைக் கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது.
இதில், திருநங்கைகள் மகளிர் சிறப்புக் குழுவினர் 13 பேருக்கு, வங்கியுடன் இணைப்பை ஏற்படுத்தி, அவர்களின் சுயதொழில் மேம்பாட்டுக்காக, புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியும் அண்மையில் அளிக்கப்பட்டது. நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி பெற்ற திருநங்கை மகளிர் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பங்கேற்று, புறக்கடை கோழி வளர்ப்பு பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் சாருஸ்ரீ, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர் சித்ரா, ஐசிஐசிஐ வங்கி மண்டல அதிகாரிகள் ஸ்ரீதர், நாராயணன், இம்தியாஸ், அஷீப் இக்பால், மாவட்ட வளர்ச்சி அதிகாரி ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.