வெறி நாய் கடித்து 3 சிறுவர்கள் காயம்
விழுப்புரத்தில் சனிக்கிழமை வெறி நாய் கடித்ததில் 3 சிறுவர், சிறுமிகள் காயமடைந்தனர்.
விழுப்புரம், வண்டிமேடு, ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் முருகதாசன். இவரது 5 வயது மகள் சாஷ்டிகா, சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வெறி நாய் ஒன்று கன்னத்தில் கடித்தது.
அதேபோல, அதே தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சுரேந்தரராஜ்(5) என்ற சிறுவனின் தொடைப்பகுதியில் வெறிநாய் கடித்தது. மேலும், அந்த தெருவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்திருந்த மற்றொரு ஐயப்பன் மகள் கலை(11) என்ற சிறுமியை வெறிநாய் கையில் கடித்தது. காயமடைந்த சிறுவர், சிறுமிகள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது: வண்டிமேடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. பராமரிப்பில்லாத, ராபீஸ் நோய் தடுப்பு ஊசி போடப்படாத அந்த நாய்கள் வெறி பிடித்து குழந்தைகள் உள்பட பொதுமக்கள் துரத்தி கடிக்கின்றன. நாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.