விழுப்புரம் காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் காவலர்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். காவலர்கள் பொங்கல் தினத்தன்று பாதுகாப்புப் பணியில் இருப்பதால், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாட வாய்ப்பில்லை.
எனவே, இந்தப் பொங்கல் விழாவில் ஆயுதப் படை காவலர்கள் மட்டுமன்றி விழுப்புரம் நகரில் பணியாற்றும் காவலர்கள், அவர்களின் குடும்பத்தினரும் பொங்கல் விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
பின்னர், காவலர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி ஆகியவை நடைபெற்றன. இதில் ஆண், பெண் காவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அதேபோல, காவலர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, காவல் துறையினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், மதுவிலக்கு டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி, காவல் ஆய்வாளர் சிவராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.