உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தியை முன்னிட்டு, அவரது சீடரான சகோதரி நிவேதிதாவின் பெயரில் சமூகத்தில் சாதனை படைத்த 6 பெண்களுக்கு தெய்வீக கனல் நிவேதிதா விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவுக்கு ஸ்ரீசாரதா ஆஸ்ரம தலைமை மாதாஜி யதீஸ்வரி இராமகிருஷ்ணப்ரியா அம்பா தலைமை வகித்து, சமூகத்தில் மக்களுக்கு சேவை செய்த பெண்மணிகளான தமிழக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் பி.ஜோதி நிர்மலாசாமி, திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் கே.பவானீஸ்வரி, திருச்சி ஜனனி கருவுறுதல் மைய நிர்வாக இயக்குநர் டி.ரமணி தேவி, சென்னை தொழில் முதலீடு நிறுவனங்கள் நிர்வாக இயக்குநர் பி.காயத்திரி, சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை கே.பாரதி சந்துரு, பெங்களூர் விஸ்வா உடைகள் நிறுவன இயக்குநர் மைதிலி ஆறுமுகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி, ஆசியுரை வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம செயலர் யதீஸ்வரி அனந்தப்ரேமப்ரியா அம்பா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அறிமுகவுரையாற்றினார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சாரதா ஆஸ்ரம சந்நியாச சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.