தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் ராஜிநாமா

தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, தனது பதவியை வெள்ளிக்கிழமை காலை ராஜிநாமா செய்தார்.

தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, தனது பதவியை வெள்ளிக்கிழமை காலை ராஜிநாமா செய்தார். மேலும், அவர் வகித்து வந்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.
 பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பெரியசெவலை செங்கல்ராயன் சர்க்கரை ஆலையின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அதன் தலைவராக பொறுப்பேற்றேன். பின்னர், தமிழக கூட்டுறவு சர்க்கரை இணையத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி. தினகரன் அணியில் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலராக பதவி வகித்து வருகிறேன். தமிழக கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.213 கோடியை வழங்கக் கோரி, தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரிடம் நேரிலும், கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தினேன். எனினும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தபாடில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் படும் துயரங்களை கண்டு மனம் வேதனையடைந்த நான் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளேன்.
 அதன்படி, தமிழக சர்க்கரை இணையத் தலைவர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை அதன் இயக்குநர் அனு ஜார்ஜிடம் வெள்ளிக்கிழமை காலையில் அளித்தேன். செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை ஆலையின் மேலாண்மை இயக்குநர் இம்மானுவேலிடம் மாலையில் அளித்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com