தினமும் சிறிது நேரம் தியானம் செய்வதால், மன அழுத்தம் நீங்கி உடலும், மனமும் நலம் பெறும் என்று பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் அறிவுறுத்தினர்.
விழுப்புரத்தில் பிரம்மா குமாரிகள் ஆன்மிக இயக்கத்தின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. "மனஅழுத்தமற்ற வாழ்க்கை' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.கு.சரவணன் வரவேற்றார். சசிக்குமார், மாலினி, பிரியா, சத்யா, அமிர்தலட்சுமி உள்ளிட்டோ இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை நிர்வாகி அம்புஜா சிறப்புரையாற்றிப் பேசியதாவது:
கடந்த 1936-ஆம் ஆண்டில் பிரம்மா குமாரிகள் இயக்கம் தொடங்கி 80 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆன்மிக சிந்தனையில் மக்களை நல்வழிப்படுத்தும் பணிகளை இயக்கம் செய்து வருகிறது. 144 நாடுகளில் இந்த இயக்கம் உள்ளது. 11 லட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர். ஐ.நா.வால் அமைதிக்கான பட்டத்தை11 முறை பெற்றுள்ளது.
இயக்கத்தின் 80-ஆண்டு நிறைவையொட்டி, பொது மக்கள், மாணவர்கள், மகளிர்கள், மூத்தகுடிமக்கள் என அனைவருக்கும் அன்பை, அமைதியை, ஆன்மிகத்தை போதித்து உலகம் அமைதிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
தினமும் சிறிது நேரம் தியானம் செய்தால் மன அழுத்தம் நீங்கி, எண்ண ஓட்டங்கள் குறைந்து, மனதில் அமைதி நிலவும். உடலும், மனமும் நலம் பெறும். இதனால், தன்னம்பிக்கை பிறக்கும். உடல், மனம், சமுதாய ஆரோக்கியம் பெற்றால், உலகம் அமைதி பெறும்.
நமது உடலை ஆன்மாவே இயக்குகிறது. ஆன்மாவை மறந்து, உடலுக்கான தேவையை நாடுவதால் ஆசைகள் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம். ஜீவ ஆத்மாவை அமைதியாக வைத்து, மகிழ்வான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். நாம் தியானம் செய்து, உடல், மனத்தூய்மையை பெற வேண்டும் என்றார். மகளிர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.