கள்ளக்குறிச்சி அருகே நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில், பெண்ணை தாக்கி, சில்லா கோலால் குத்தியவர் தலை மறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது மனைவியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமம், காட்டுகொட்டகை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது நிலத்துக்குப் பக்கத்தில் ஜெயராமன் என்பவரது நிலம் உள்ளது. இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறதாம். இந்த நிலையில், ஜெயராமன் அவரது நிலத்தில் கரும்பு சக்கையை வியாழக்கிழமை தீயிட்டு எரித்தாராம்.
அப்போது, தீ பாண்டியனின் நிலத்தில் உள்ள மரவள்ளிக் குச்சியின் மீது பட்டு, கருகிவிட்டதாம். இதுகுறித்து, பாண்டியனின் மனைவி ராணி (35), அவரது மகள் சங்கீதா ஆகியோர் தட்டிக் கேட்டனாராம். அப்போது, ஜெயராமன் மனைவி கலைச்செல்வி இருவரையும் திட்டியுள்ளார். ஜெயராமன் அவரது கையில் வைத்திருந்த சில்லா கோலால் ராணியின் வயிற்றில் குத்திவிட்டு, தப்பிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கலைச்செல்வியை கைது செய்தனர். தப்பியோடிய அவரது கணவர் ஜெயராமனை போலீஸார் தேடி வருகின்றனர்.