திருக்கோவிலூரில் கூட்ட நெரிசலில் சிக்கி அதிமுக தொண்டர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருக்கோவிலூர்-சந்தப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திருக்கோவிலூர், முகையூர், மணம்பூண்டி ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். விழாவில் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.குமரகுரு கலந்து கொண்டு, கட்சித் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, அரகண்டநல்லூர் பேரூராட்சி 11-ஆவது வார்டு பிரதிநிதி கருணாநிதி (61) உயிரிழந்தார்.
மேலும், சிலருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த கருணாநிதி, ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் என்பது குறிப்பிடத் தக்கது.