விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கடலூர், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் காசிம் மகன் முபாரக் (24). இவர், சவூதிஅரேபியாவில் பணிபுரிந்து, விடுமுறைக்காக சொந்த ஊருக்குப் புறப்பட்டு வந்த, தனது சகோதரர் சவுகத் அலியை அழைத்து வருவதற்காக, சென்னை விமான நிலையம் நோக்கி புதன்கிழமை காலை காரில் புறப்பட்டுச் சென்றார். காரை ஓட்டுநர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த ஜகன்னாதன் மகன் விக்னேஷ் (25) ஓட்டினார். காலை 7.30 மணியளவில், திண்டிவனத்தை அடுத்த பாதிரி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக்கட்டையில் ஏறி, எதிர் திசையில் சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முபாரக், விக்னேஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சடலங்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.