வெள்ளம்புத்தூரில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய், மகளின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி, அவரது 13 வயது மகள், மகன் சமயன் ஆகியோர் கடந்த மாதம் 21-ஆம் தேதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இதில் சமயன் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த ஆராயி, அவரது மகள் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த பிப்.22-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். 16 நாள்கள் அங்கிருந்த ஆராயி, அவரது மகள் அருகில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். நுரையீரல் பிரச்னைக்காக இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தாய், மகள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகளுக்கு பேச்சு சரியாக வரவில்லையாம்.
இருவர் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீஸார் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். சம்பவம் நடந்து 20 நாள்கள் கடந்த நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.