தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து, தேமுதிக சார்பில் விழுப்புரத்தில் திங்கள்கிழமை (மே 28) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மக்கள் உணர்வை மதித்து நடவடிக்கை எடுக்காமல், ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது வேதனையளிக்கிறது. 99 நாள்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், 100-ஆவது நாளில் எழுச்சியான போராட்டம் இருக்கும் என்று, போராட்ட அமைப்புகள் அறிவித்ததால், எவ்வளவு கூட்டம் இருக்கும் என போலீஸாருக்கும், நிர்வாகத்துக்கும் தெரிந்திருக்கும். இதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
கூட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் போனது, ஆலை நிர்வாகத்துடன் சேர்ந்து, மக்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு அரசு திட்டமிட்டுள்ளது தெரிகிறது. தொடர்ந்து ஆலை நடைபெறுவதற்கும், மக்கள் போராட்டத்தை ஒடுக்கி மிரட்டுவதற்கும் துப்பாக்கிச் சூட்டை அரசு நடத்தியுள்ளதாகத் தோணுகிறது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என அதில் தெரிவித்துள்ளார்.