கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை கத்திமுனையில் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மூவரை தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தென்செட்டியந்தலைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ரத்தினாம்பாள் (37). இவர், புதன்கிழமை இரவு பங்காரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதே ஊரைச் சேர்ந்த வேங்கடபதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இந்திலி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த 3
மர்மநபர்கள் இந்திலியில் உள்ள தனியார் கல்லூரி முன்பாக இருவரையும் மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரத்தினாம்பாள் அணிந்திருந்த 2 பவுன் நகையையும் வேங்கடபதியிடமிருந்து ஏடிஎம் அட்டையையும் பறித்துக் கொண்டனர்.
இவர் கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் துரத்திச் சென்று ஒரு கொள்ளையரைப் பிடித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜெயச்சந்திரன் மகன் சந்திரசேகர் (21) எனத் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2-இல் வியாழக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.