விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கடலூர் மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் விதத்தில், கடலூர் மண்டல அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் தொடங்கியது. கல்வித் துறை சார்பில் நடைபெறும் இந்தப் போட்டிகளை, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தொடக்கி வைத்தார். விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெ.சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. 14 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்டோருக்கு, மாணவர்கள், மாணவிகளுக்கு தனித் தனிப் பிரிவாக, 100 மீ., 200 மீ., 400 மீ. 600 மீ., 800 மீ., 1,500 மீ., 3,000 மீ. ஓட்டப் போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றித் தாண்டுதல், தடைகளைத் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில், விழுப்புரம், கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தடகளப் போட்டிகளைத் தொடர்ந்து குழுப்போட்டிகள், புதிய விளையாட்டுகள் என அக்.24-ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறுவோர், கடலூரில் இந்த மாத இறுதியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
உடற்கல்வி ஆய்வாளர்கள் பத்மநாபன், ராஜரத்தினம், உடல் கல்வி இயக்குநர்கள் மோகனசுந்தரம், அசோகன், சிவாஜி, சரவணன் உள்ளிட்டோர் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.