விழுப்புரம் அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை சமூக நலத் துறை, சைல்டு லைன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம் அருகே காணையை அடுத்த சாணிமேடு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கண்டாச்சிபுரத்தில் ஐடிஐ 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அவரது தாய் மாமாவான அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தராஜ்(24) என்பவருக்கும், அக். 19-ஆம் தேதி விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூர் கோயிலில் திருமணம் செய்துவைக்க இருவரது பெற்றோர்களும் முடிவு செய்து, பத்திரிகைகளை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதையடுத்து, சமூகநலத் துறையின் கீழ் உள்ள கிராம முக்கிய சேவகர் திலகவதி, கிராம சேவகர் சாந்தி மற்றும் சைல்டு லைனைச் சேர்ந்த அருள்மணி ஆகியோர் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். விசாரணையில், உறவு முறை என்பதால் சிறுமிக்கு திருமணம் நடத்தவிருந்தது தெரிய வந்ததாம். இதையடுத்து, 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி, அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு விழுப்புரம் அழைத்து வந்தனர்.