விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி முதல் விழுப்புரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை வரையில் சாரல் மழையாக தொடர்ந்தது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. மேலும், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதேபோல, காணை, வளவனூர், விக்கிரவாண்டி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பகல் முழுவதும் மழை பெய்தது. திண்டிவனத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து, பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மாவட்டத்தில் சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது. கள்ளக்குறிச்சியில் பிற்பகல் சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளிர்ந்த சூழல் நிலவியது.