விழுப்புரம் அருகே நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் சிறுவந்தாடு, ராகவன்பேட்டையில் ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட எல்.இ.டி. உயர்கோபுர மின் விளக்குகளை லட்சுமணன் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.
விழுப்புரம்-புதுச்சேரி சாலையில், விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட 41-ஆவது வார்டு ராகவன்பேட்டைக்குச் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் அவ்வப்போது விபத்துகள் நேரிட்டு வந்தன.
மேலும், சிறுவந்தாடு பகுதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பகுதியில் உள்ள தெருவில் எல்.இ.டி. உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இந்த இரண்டு இடங்களிலும் இரா.லட்சுமணன் எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.8.50 லட்சம் செலவில் மொத்தம் ரூ.17 லட்சத்தில் எல்.இ.டி. உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனை இரா.லட்சுமணன் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட விவசாய அணிச் செயலாளர் தணிகாசலம், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணவாளன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் எம்.என்.முருகன், கண்டமங்கலம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் வைத்தியலிங்கம் , ஊராட்சி கழகச் செயலாளர் ஆதிகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.