விநாயகர் சதுர்த்தியை வரவேற்கும் விதமாக, உடைந்த கண்ணாடி வளையல்கள், சிறிய தெர்மோகோல் பந்து உள்ளிட்டப் பொருள்களால் வித்தியாசமான விநாயகர் உருவங்களை விழுப்புரம் பகுதி கல்லூரி மாணவிகள் உருவாக்கி பாராட்டைப் பெற்றனர்.
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் படித்து வரும் மாணவி ஆர்.தேவி, மோஷிக நர்த்தன விநாயகர் உருவத்தை நேர்த்தியாக வரைந்து, அதனை வண்ண நூலால்அலங்கரித்துள்ளார்.
இதே போல், விழுப்புரம் அரசு பெண்கள் கல்லூரியின் கணினி அறிவியல் மாணவி டி.கிருத்திகா, மகா கணபதி உருவத்தை வண்ணமயமான சிறிய தெர்மோ கோல் பந்துகளால் செம்மையாக உருவாக்கி பிரமிக்கச் செய்துள்ளார்.
பவ்டா கலை அறிவியல் கல்லூரி பிசிஏ மாணவி டி.அமுதராணியும் யோக கணபதியின் உருவத்தை, உடைந்த கண்ணாடியால் வரைந்து அழகு சேர்த்துள்ளார். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி பிபிஏ மாணவி ஆர்.ராகவி, பிள்ளையார் கண்ணுக்கு பயன்படுத்தும் மணிகளையும், முத்து மணிகளையும் கோர்த்து, நேர்த்தியான விஷ்ணு கணபதியை உருவாக்கியுள்ளார். பட்டப் படிப்புகளுடன், விழுப்புரம் பிகாசோ ஆர்ட் அகாதெமி பயிற்சி மையத்தில், ஓவியப் பயிற்சியும் பெற்று வரும் இந்த மாணவிகள், பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். சதுர்த்தியை முன்னிட்டு, வித்தியாசமான வகையில் விநாயகர் உருவங்களை ஒரு வார காலத்தில் உருவாக்கியதாக தெரிவித்த அவர்கள், தங்களது கண்கவரும் படைப்புகளுக்காக பாராட்டப்பட்டனர்.