விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 419 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் ஆட்சியர் மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.
கூட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித் திட்டத்தின்கீழ், இறப்பு நிவாரண நிதியுதவியாக கண்டாச்சிபுரம் வட்டத்தைச் சேர்ந்த பாபு மனைவி அஞ்சலைக்கு ரூ.1 லட்சமும், விக்கிரவாண்டி வட்டத்தைச் சேர்ந்த அமாவாசை மகன் மதியழகனுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.