விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் பாரதிய அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மண்டல பொதுச் செயலர் டி.விமேஸ்வரன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கே.சண்முகம், பொருளாளர் எஸ்.ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்பாரத அமைப்புச் செயலர் எஸ்.துரைராஜ், பொதுச் செயலர் ஆ.கணேசன் அமைப்புச் செயலர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக இணைக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தகுதியில்லாத பேருந்துகளை இயக்குவதை நிறுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.