அகில இந்திய விவாசாயிகள் மகா சபை, அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் பி.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்ட நிர்வாகிகள் கே.சின்னத்துரை, கே.ஏழமலை, டி.சிவகண்டன், தெய்வசிகாமணி, டி.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலர் எம்.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில், திருநாவலூர் காவல் சரகத்தில் காவல் நிலைய அதிகாரிகளின் துணையோடு சட்ட விரோதமாக கனிமவளங்கள் சுரண்டப்படுகின்றன. ஆனால், அரசு அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுப்பு வீடுகளுக்கு மாட்டு வண்டியில் மணல் எடுத்தால் கைது நடவடிக்கை தொடர்கிறது.
எனவே, இந்த காவல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து, வரும் 19-ஆம் தேதி திருநாவலூர் காவல் நிலையத்தில் தாம்புல தட்டு சீர்வரிசை (லஞ்சம்) கொடுக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.