விழுப்புரத்தில் நடைபெற்ற காவலர் உடல் திறன் தேர்வில் 1,422 பேர் தேர்ச்சி பெற்றனர்.
விழுப்புரம், காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. இதில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,343 பேர் பங்கேற்றனர்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடல் திறன் தேர்வு நடைபெற்றது. முதல்கட்டமாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற உடல் திறன் தேர்வில் கலந்து கொண்ட ஆண்களில் 754 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீதமுள்ள 791 ஆண்களுக்கு உடல் திறன் தேர்வு நடைபெற்றது. கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், ஓட்டப்போட்டி ஆகியவை நடைபெற்றன. 6 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வில் பங்கேற்றவர்களில் அதிகபட்சமாக 107 பேர் கயிறு ஏறுதலில் தோல்வியடைந்தனர்.
பின்னர், உயரம் அல்லது நீளம் தாண்டுதலில் 6 பேரும், ஓட்டப் போட்டியில் 4 பேரும் தோல்வி அடைந்தனர். அனைத்திலும் 668 பேர் தகுதி பெற்றனர். ஆண்களுக்கு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற உடல் திறன் தேர்வுப் போட்டிகளில் தகுதிப் பெற்ற மொத்தம் 1,422 பேரும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.