விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வெள்ளிக்கிழமை அதிகாலை நீண்ட நேரம் பேருந்துகள் வராததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து வந்த அரசு, தனியார் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் வழக்கம்போல, விடுமுறை முடிந்து வியாழக்கிழமை இரவு முதல் ஊருக்குப் புறப்பட்டனர்.
இதனால், வியாழக்கிழமை நள்ளிரவு முதலே விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, சென்னை, திருச்சி, சேலம், மதுரை மார்க்க பேருந்துகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இருப்பினும், அந்த மார்க்கங்களில் வந்த பேருந்துகளில் பயணிகள் நின்றபடி பயணித்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு சென்னை, சேலம், திருச்சி மார்க்க பேருந்துகள் நீண்ட நேரம் வராததால், பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதனால், பயணிகள் பேருந்து நிலைய நுழைவு வாயிலுக்குச் சென்று பேருந்துகளில் ஏற காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் வரை பேருந்துகள் வராததால் விரக்தியடைந்த பயணிகள், பேருந்து நிலையத்தின் வாயில் பகுதிக்கு வந்து திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற புறநகர் பகுதி பேருந்துகள் வந்ததையும் பேருந்து நிலையத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் பயணிகள் தடுத்து நிறுத்தினர். இதனால், சில பேருந்துகளை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்லாமல் ஓட்டுநர்கள் திருப்பி எடுத்துச் சென்றனர்.
மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து சென்னை, திருச்சி மார்க்கங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து, நீண்ட நேரம் பேருந்துகளுக்கு காத்திருந்த பயணிகள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கு வந்த சென்னை, சேலம், திருச்சி மார்க்க பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.
தொடரும் போராட்டம்:
விழுப்புரத்திலிருந்து முறையாக சென்னை, திருச்சி, சேலம் போன்ற வெளியூர்களுக்கு பேருந்து சேவை இல்லை எனக் கூறி, கடந்த ஓராண்டில் மட்டும் 10-க்கும் அதிகமான முறை பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, முக்கிய பண்டிகைகள், விடுமுறை நாள்களில் பணிகளின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கு ஏற்றாற்போல பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.